தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் - வானிலை மையம்

 
rain

தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி செல்கின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். வருகிற 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.