‛நாப்கின்’ பாக்ஸில் ராகுல் காந்தியின் போட்டோ : வெடித்த சர்ச்சை!
பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகாரை எடுத்துக் கொண்டால் தற்போது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இங்கு பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே போட்டி நிலவ உள்ளது. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி முக்கிய இடம் வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் பிரதான கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் உள்பட பிற கட்சிகள் இருக்கின்றன. அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.
பெண்களின் வாக்குகளை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் ‛பத்மன்’ பட பாணியில் மாநிலத்தில் உள்ள 5 லட்சம் பெண்களுக்கு இலவச ‛சானிட்டரி நாப்கின்’ வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் பிரயதர்ஷினி உதான் யோஜனா என்ற பெயரை வைத்துள்ளது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. இந்த ‛நாப்கின்’ பாக்ஸின் மேல்புறம் ராகுல் காந்தியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி இடம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‛மகாபந்தன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை குறிப்பிட்டும் நாப்கின் பாக்ஸின் மேல்புறம் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது. நாப்கின் பாக்ஸின் மேல் ராகுல் காந்தியின் போட்டோ போடப்பட்டு இருப்பதை பாஜக விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ‛‛சானிட்டரி பேட் மீது ராகுல் காந்தியின் போட்டோவை பொறித்து பீகார் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சி. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு பெண்கள் பாடம் புகட்டுவார்கள்” என கூறியுள்ளார்.


