அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஸ்கூல் பேக், ஷு வாங்க ரூ.1,000 வழங்கும் அரசு
புதுச்சேரியில் ஷு, புத்தக பை வாங்க அரசு பள்ளி மாணவர்கள் 80 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய, தென்மண்டல போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. விளையாட்டுத்துறை இயக்குனர் சுதாகர் வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினர்.
விழாவில் முதல் அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், கல்வித்துறையுடன் விளையாட்டுத்துறை இணைந்து இருந்ததால் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதனால் தனித்துறையாக விளையாட்டுத்துறை கொண்டு வந்துள்ளோம். பயிற்சியாளர்களுக்கு முன்பு ரூ. 10 ஆயிரம் ஊதியம் தந்ததை தற்போது ரூ. 50 ஆயிரம் தருகிறோம். இதனால் சோர்ந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெம்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தந்துள்ளோம். விளையாட்டில் அதிகளவில் பங்கு கொண்டு அதிக பதக்கம் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. போட்டியில் பங்கேற்க செல்ல வீரர்கள் பணம் இல்லாமல் சிரமம் படுவார்கள்.
வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதி தந்தோம். இப்போது தனிநிதி ஒதுக்கி, வீரர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலம் செல்ல அரசே உதவும்.அரசு நிதியிலேயே இனி செல்லலாம். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுதிடல்களை மேம்படுத்த ரூ. 200 கோடி தருவதாக சொல்லியுள்ளார். பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு சென்றுள்ளனர். இந்த நம்பிக்கையையும் அரசு தந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு தந்துள்ளோம்.அரசு பணியில் 5 ஆயிரம் பேருக்கும், தனியாரில் 8 ஆயிரம் பேருக்கும் வேலை தந்துள்ளோம். புதுச்சேரியில் புத்தகப்பை, ஷூ வாங்கி தர தேர்தல் நேரத்தில் சிரமம். அதனால் இரண்டும் வாங்க தலா ரூ 1000ம் வீதம் உடனடியாக 80 ஆயிரம் மாணவகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெற்றோரில் தாய் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்றார்.

