புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு

 
tn

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில்  9 வயது சிறுமி  கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த கால்வாயில் சிறுமியின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர்  மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

tn

ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

murder

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.