"பாஜக-என்.ஆர்.காங் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது"- ரங்கசாமி
புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜக கூட்டணியில் இருக்கிறோம். பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் சேர்கிறதா? என்ற கேள்விக்கு "நன்றி வணக்கம்." என கூறி சென்றார்.

புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காமராஜர் சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் இன்று மாலை நடந்தது. என்.ஆர் காங் தரப்பில் அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி,பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன் ஆகியோரும் பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா,மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் மற்றவர்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
சுமார் அரைமணி நேரம் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின் வெளியே வந்த முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "எப்பொழுதும் நாங்கள் என்டிஏ பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம். தற்போதும் கூட்டணியில் தான் இருக்கிறோம். அடுத்த தேர்தலிலும் இதே கூட்டணியில் சந்திக்கிறோம், இதர விவரங்கள் தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூறுவேன். இன்றைய தினம் நடைபெற்ற பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருக்கிறது. சுமூகமாக இருக்கிறது" என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் சேர்கிறதா? என்ற கேள்விக்கு "நன்றி வணக்கம்." என கூறி சென்றார்.

