புதுச்சேரி மக்களுக்கும் பொங்கல் பரிசு.. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசிபருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது... அதேபோல் புதுச்சேரியிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலலமைச்சர் ரங்கசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.490 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் திங்கள்கிழமை முதல் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.
பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலக்காய், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட 10 பொருட்களுடன் கூடிய பரிசுத்தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஜனவரி 12ல் தேசிய இளைஞர் திருவிழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வரவில்லை எனவும், காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பார் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.