எங்கள் எய்ம்ஸ் எங்கே ? - மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டம்
மதுரையில் எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கற்களை கைகளில் ஏந்தி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இருப்பினும் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் முழுமையாக தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி அவர்களுக்கான வகுப்புகள் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்து வருகிறது.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வழங்குவது தாமதமாகும் நிலையில் மத்திய அரசு தன் பங்கீடான ரூபாய் 400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி மருத்துவமனையை கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தியும் , போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன் , நவாஸ் கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணி கட்சியினர் கையில் செங்கல் ஒன்றை வைத்தபடி எய்ம்ஸ் எங்கே என்று முழங்கி வருகின்றனர்.