பேருந்துகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அனுமதிக்க கூடாது - போக்குவரத்துத்துறை உத்தரவு

பேருந்துகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அனுமதிக்க கூடாது என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களை மாநகரப் பேருந்து எடுத்துச் சொல்ல அனுமதிக்க கூடாது என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் பயணி ஒருவர் ஐந்து கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம்.
அதேசமயம் ஐந்து முதல் 20 கிலோ வரை உள்ள எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூபாய் 10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்றி செல்ல அனுமதிக்க கூடாது, பயணிகள் இல்லாத சுமைகளை மாநகர பேருந்தில் ஏற்ற அனுமதிக்க கூடாது என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் என்றும் போக்குவரத்து துறை தனது உத்தரவில் கூறியுள்ளது.