தமிழகம் வரும் தலைவர்களுக்கு அளிக்கப்படவுள்ள பரிசுகள்!

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்காக தமிழகத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டவுள்ளன.
நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டவுள்ளன. பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.