“கைதிகள் விடுதலை- முதல்வரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை”

49 சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு, உள்துறை செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்தார்..
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராயிருந்த வழக்கறிஞர் டாக்டர் மனோகர் ,தமிழக அரசின் பரிந்துரைக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை, மேலும் தாமதம் செய்வார் என குற்றம்சாட்டினார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆளுநரின் முடிவு என்ன என்பது குறித்து தெரிந்த பின்பு வழக்குகளை முடிவு செய்யலாம் எனக்கூறி வழக்கின் விசாரணையை வரும் 29 ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.