இன்று பிரதமா் மோடி மணிப்பூா் செல்கிறார் : ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்..!

 
1

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-ல் இனமோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். இனமோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டு, அமைதி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்று டெல்லியில் இருந்து மிசோரம் செல்லும் பிரதமா், அங்கிருந்து மணிப்பூருக்கு பயணிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

தலைநகா் இம்பாலில் உள்ள காங்லா கோட்டை வளாகத்திலும், சுராசந்த்பூரில் (குகி பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதி) உள்ள அமைதி மைதானத்திலும் பிரதமரின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 237 ஏக்கா் அளவிலான காங்லா கோட்டை, பண்டைய மணிப்பூா் ஆட்சியாளா்களின் அதிகார மையமாக விளங்கியதாகும். மூன்று பக்கம் அகழிகளும், ஒரு பக்கம் இம்பால் ஆறும் சூழ்ந்துள்ள இக்கோட்டை வளாகத்தில் மிகப் பெரிய போலோ விளையாட்டு மைதானம், சிறிய வனம், பண்டைய கோயில்களின் சிதிலங்கள், தொல்லியல் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

சுராசந்த்பூரில் பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் அமைதி மைதானமும் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ளது. இம்பால், சுராசந்த்பூரில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவம், மத்தியப் படைகள், மாநில காவல் துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதி மாவட்டங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.