ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி.. ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வருகை..!
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்க இருக்கிறார்.
மாலத்தீவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்றிரவு தூத்துக்குடி வந்தடைந்த பிரதமர் மோடி, புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு 10 மணியளவில் விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், இரவு அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். இன்று காலை விடுதியில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை காரில், ரோடு ஷோ நடத்த உள்ளார். தொடர்ந்து அங்கிருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அறியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார்.

அங்கு முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கைகொண்ட பிரகதீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில், சிவன் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரதமர் மோடிக்கும் கோயிலில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட இருக்கிறது. பின்னர் வாரணாசியியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரைக் கொண்டு கங்கைகொண்ட சோழீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, கோயிலில் அமந்து தியானம் செய்ய இருக்கிறார்.
மேலும், கோயில் சிற்பங்கள் , தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் மோடி, தொடர்ந்து நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேர்கிறார். முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த ஆடி திருவாதிரை விழாவில் , ராஜேந்திர சோழன் நினைவு நாயணத்தை அவர் வெளியிடுகிறார். இந்த விழாவை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியிலும் அவர் கலதுகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


