"விஜய் எங்கள் தம்பி தான்”- பிரேமலதா விஜயகாந்த்
விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் அவர் எங்களுக்கு தம்பி, அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி, உறவு என கடலூரில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்னும் பிரச்சார பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். மேலும் கேப்டனின் ரத யாத்திரை, மக்களைத் தேடி மக்கள் தலைவர் என்னும் பெயர்களில் இந்த பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி, மாளிகை மேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.
அதன்படி பண்ருட்டி பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து மக்களுடன் தேமுதிக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில் விஜய் எங்களுக்கு தம்பி,அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு,கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது இந்த உறவு என்றார்.மேலும் தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என தெரிவித்த அவர், ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்,

