தேமுதிக நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக முக்கிய ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வருகிற 14- ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளான நேற்று தென் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டப் செயலாளர்கள் பங்கேற்றனர். கொங்கு மண்டலத்தை சார்ந்த நீலகிரி, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு , உதகமண்டலம், கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ,உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்பட 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா கட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுமாறு, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும் என்றும், கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் உரிய நேரத்தில் தலைமை சரியான முடிவு எடுக்கும் என்று அவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


