“இன்ஸ்டாகிராம் வெற்றியா? திமுகவினருக்கு மக்களின் மனநிலை புரியவில்லை”- பிரவீன் சக்ரவர்த்தி

 
பிரவீன்

தமிழகத்தில் TVK-வின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராமால் உருவான வெற்றி என்று கூறி திமுக நிராகரிக்க விரும்பினால், அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்கள் விஜய்யின் தவெக வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழல் உருவானது. இப்படிப்பட்ட நிலையில் தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை 10 பேர் மட்டுமே இடம்பெற்று இருந்த அமைச்சரவையில், இன்று புதியதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். 

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரவீன் சக்ரவர்த்தி அளித்த பேட்டியில், “தமிழகத்தில் TVK-வின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராமால் உருவான வெற்றி என்று கூறி திமுக நிராகரிக்க விரும்பினால், அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன், அவர்கள் அந்த முட்டாள்களின் சொர்க்கத்திலேயே இருக்கட்டும். அவர்களுக்கு மக்களின் மனநிலை புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.