பொங்கல் பரிசு - வீடுவீடாக டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9ம் தேதி முதல் வழங்கப்படவுள்ள நிலையில் டோக்கன் விநியோகம் தொடங்கியது.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத்த தொகுப்பு வழங்கப்படும் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அந்தந்த தேதிகளில் பொங்கல் பரிசு தொகை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் இன்று வீடு வீடாக சென்று நியாய விலை கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகத்தை மேற்கொண்டனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனை பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் இந்த திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணியில் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட தினங்களுக்குள் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதால் அனைத்து நியாயவிலைக் கடைகளும் விடுமுறை தினங்களில் இயங்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.