பொள்ளாச்சி வழக்கு விசாரணை தீவிரம்- விரைவில் தீர்ப்பு

 
ச்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் இருந்து இன்று அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அதைத்தொடர்ந்து, ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர்.வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் சட்ட விதிகள் 313-இன் கீழ் கேள்விகள் கேட்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்பட கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று காலை சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் விசாரணையானது நடைபெற்றது. நீதிமன்ற கட்டடத்தில் உள்ள தனி அறையில் வைத்து 9 பேரிடமும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. இறுதிக்கட்டமாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மே மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாலியல் வழக்கின் விசாரணையானது 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.