“தவெக தொண்டர்களுக்கு ஆதரவாக அதிமுக குரல் கொடுக்கும்”- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதிமுக அதற்கு குரல் கொடுக்கும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக, தட்டான் தோட்டம் பகுதியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சாதனை திட்டங்களை விளக்குவதும், திமுக அரசு பதவி ஏற்ற இந்த 4.5 - ஆண்டுகளில் மக்கள் படும் வேதனைகளை விளக்குவதுமான தெருமுனை பிரச்சாரக் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி அதிமுக கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டால் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். தவெக தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் ஸ்டாலின் போலீஸ் ஈடுபட்டு இருக்கிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது. தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதிமுக அதற்கு குரல் கொடுக்கும். கோவையில் இன்று 1635 கோடி ரூபாயில் பெரிய பாலம் கட்ட தொடங்கி வைத்தார். நான்காண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது. 4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அதிமுக என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை. நகைச்சுவை. ஜனநாயகத்தை காக்க, சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடியார் செய்து வருகிறார். அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், கூட்டத்தில் தவெகவினர் வந்தது பிள்ளையார் சுழி என்றும் சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.


