மன உளைச்சலில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
நெல்லையில் மன உளைச்சலில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பெருமாள்புரம் ஏ ஆர் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசி (வயது 40). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் 2 பெண் குழந்தைகளை முத்தரசி கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முத்தரசி அதிக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று முத்தரசி அதிக மன உளைச்சலில் இருந்த நிலையில் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


