ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது போலீசார் வழக்குப் பதிவு..!!

 
Q Q

திருச்சி மாவட்டம், லால்குடி, தாளக்குடியை சேர்ந்தவர் கதிரவன், 45; தனியார் 'டிவி' நிருபர். கேமராமேன் செபாஸ்டியன், 47. திருநெல்வேலியை சேர்ந்த, காவிரி மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்க நிர்வாகி சுடலை கண்ணன், 50, திருச்சி முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் திருமலைராஜன், 50, இவரது குமாஸ்தா ராஜமாணிக்கம், 48, ஆகியோர், திருச்சி மாவட்டத்திற்கு காரில் வந்தனர். அங்கு, ஸ்ரீரங்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டியின் மகன் விமலாதித்தன் பெயரில் இயங்கி வரும் கல்குவாரியை, ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்றார்.

இதில், எம்.எல்.ஏ., பழனியாண்டி தலைமையில், ஒரு கும்பல், அவர்களை அடித்து உதைத்ததாக கதிரவன், போலீசில் புகார் செய்தார்.

அதேபோல, விமலாதித்தன், 32, அரசு உரிமம் பெற்ற கல் குவாரியை, சட்ட விரோதமாக, சுடலை கண்ணு உள்ளிட்ட, ஐந்து பேர் பணம் கேட்டு மிரட்டி, வீடியோ எடுத்ததாகவும், தட்டி கேட்ட குவாரி ஊழியர்களை அடித்ததாகவும் புகார் செய்தார்.

குளித்தலை போலீசார் விசாரித்தனர்.நேற்று முன்தினம் இரவு, பழனியாண்டி, விமலாதித்தன் உட்பட, 22 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். அதன், வழக்கு விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

விமலாதித்தன் புகாரில், சுடலை கண்ணு, கதிரவன், செபாஸ்டியன், திருமலைராஜன், ராஜ மாணிக்கம் ஆகிய ஐந்து பேர் மீதும் காயம் ஏற்படுத்துதல், மிரட்டி அச்சுறுத்துதல், சட்ட விரோதமாக கூடி வன்முறையில் ஈடுபடுதல், அத்துமீறி நுழைதல் ஆகிய, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.