காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு! முதல்வர் விஜய் அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

 
Udhayanidhi

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்பை விடத் தற்போது கூடுதல் எண்ணிக்கையிலான காவலர்கள் துறைக்குத் தேவைப்படுகிறார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாகக் காவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும் தேர்வை இன்னும் ஓராண்டுக்குத் தள்ளிவைத்து, அடுத்த ஆண்டுதான் (2027) இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தவெக அரசு அறிவித்திருப்பது நிர்வாகச் சுணக்கத்தையே காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பல்வேறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வயது வரம்பு கடந்துவிடுமோ என்ற அச்சத்திலும் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கோச்சிங் சென்டர்களுக்குச் சென்றும், மைதானங்களில் பயிற்சிகளை மேற்கொண்டும் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். அரசின் இந்த திடீர் தள்ளிவைப்பு அறிவிப்பால் பல இளைஞர்களின் வயது வரம்பு முடிந்து, அவர்கள் காவலராகும் தகுதியையே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பையும், அரசுப் பணிகளையும் தங்களது முதல் முன்னுரிமையாகக் கையாள்வோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தற்போது இளைஞர்களின் வயிற்றிலடிப்பது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலத்தில் நிலவும் காவலர் பற்றாக்குறையைப் போக்கவும், வேலைவாய்ப்பற்ற வாலிபர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தள்ளிவைப்பு உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நடப்பு ஆண்டிலேயே திட்டமிட்டபடி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் காவலர் தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுத் தேர்வை நடத்த முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தவெக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகத் திமுக இளைஞரணி சார்பில் மாநிலம் தழுவிய பிரம்மாண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.