10.5% இடஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது?- ராமதாஸ்

 
ramadoss ramadoss

10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல் இன்னும்  எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ramadoss


இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அதனை செயல்படுத்த சில வழிகாட்டுதல்களை வழங்கிய பின்பும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக திமுக அரசு வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத காரணத்தால் வன்னிய இளைஞர்கள் பலர் கல்வி கற்க முடியாமலும் வேலைவாய்ப்பினை பெற முடியாமலும் தவித்து வருகின்றார்கள். இந்நிலையில் வேலை கிடைக்காமல் விரக்தியில் இளைஞர் தற்கொலை என்கிற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையில் உள்ளேன். இதற்குத்தானே ஒவ்வொரு அரசிடமும் மன்றாடி கேட்கின்றேன். வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாத அரசுகளை கண்டித்து தொடர்ந்து போராடி வந்து கொண்டிருக்கின்றேன். இதுபோல் இன்னும் எத்தனை பிணங்களை இந்த ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இட ஒதுக்கீடு ஒன்றும் ஆட்சியாளர்கள் போடும் பிச்சை அல்ல அது தமிழகத்தில் வாழும் மக்களினுடைய உரிமை பங்காகும். அதை வழங்காமல் இழுத்து அடித்து இதுபோல் எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது? 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கந்தன்-பூங்கொடி  தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சதீஷ்குமார் பட்டப்படிப்பு படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை செய்கிறார். இத்தம்பதியினரின் இளைய மகன் விஜயகுமார் (28)  2018-ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு வேலைக்கு அரசு போட்டித் தேர்வுகளை எழுதி வந்தள்ளார்.  இந்நிலையில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியால் இன்று தைபூச திருவிழாவிற்கு குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றுவிட்ட நிலையில் தனியே வீட்டில் இருந்த விஜயகுமார்  தனது டைரியில் வேண்டும் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு என எழுதி வைத்து அதை தனது கையில் இறுகப்பற்றியவாரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்த கந்தன் மற்றும் பூங்கொடி உள்ளிட்ட உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாரின் உடலை கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் கைப்பற்றி, விஜய்குமார் இறக்கும்போது கைப்பட எழுதிய கடிதம் மற்றும் அவரின் டைரியில் சில பக்கங்களில் எழுதிய வாக்கு மூலத்தையும் கண்ணமங்கலம் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போலீசார் சடலத்தை கைப்பற்றிய போது டைரி மற்றும் லெட்டர் ஏதும் கைப்பற்றவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இதனை மூடிமறைக்க குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்த விஜய்குமாரின் பெற்றோரை புகார் அளிக்குமாறு திமுகவினர் கட்டாயப்படுத்துகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நீட் தேர்வு மூலம் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  அதனுடன்  திமுக அரசின் சூழ்ச்சியால் உயர்நீதிமன்றம்  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ததால்  தற்கொலைகள்  மேலும் நீள்கிறது. இன்னும் எத்தனை இளைஞர்களை  இந்த  அரசு  காவு  வாங்க  உள்ளது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விக்குறியாக உள்ளது. இறந்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன். விஜயகுமாரின் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல. குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக பாமகவினர் உடன் இருப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.