ஏ... அப்பா! இவ்வளவு பிடிவாதமா? மாலை 5.20 மணி முதல் ராமதாஸை சந்திக்க காத்திருக்கும் நிர்வாகிகள்

மாலை 5.20 மணிக்கு வந்த கட்சி நிர்வாகிகளை தற்போது வரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தலை கருத்தில் கொண்டு பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கிவிட்டு அக்கட்சியின் நிறுவனர் என்ற முறையில் தன்னை தானே பாமகவின் தலைவராக ராமதாஸ் அறிவித்துகொண்டு அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் என அறிவித்திருந்தார். இதற்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமாக கட்சியின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்திலும் குறிப்பிட்டிருந்தார். பாமகவினர் திண்டிவனத்தில் அன்புமணியை தலைவராக்க வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மீண்டும் அன்புமணி ராமதாசை தலைவராக நியமிக்க கோரி ராமதாசின் குடும்ப உறுப்பினரும் மகளுமான காந்தி, கவிதா, மயிலம் பாமக எம்.எல் ஏ சிவக்குமார், தலைமைநிலை செயலாளர் அன்பழகன்,பாமக வழக்கறிஞர் பாலு, முன்னாள் பாமக எம் பி செந்தில்குமார், ராமதாசிடம் நேற்று சமாதானம் பேசினர். ஆனால் ராமதாஸ் அதற்கு செவிசாய்க்கவிலை.
இந்நிலையில் இன்றும் பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸை சந்திக்க, தைலாபுரம் தோட்டம் வந்த நிர்வாகிகள் பாலு, முன்னாள் எம்.பி செந்தில்குமார், வன்னியர் சங்க மாநில செயலாளர் சேலம் கார்த்திக், பசுமை தாயகம் அருள் ஆகியோர் கடந்த 3 மணி நேரமாக காத்திருக்கின்றனர். மாலை 5.20 மணிக்கு வந்த கட்சி நிர்வாகிகளை தற்போது வரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்கவில்லை. இன்று மாலை பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி மட்டும் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றார்.