தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் - அன்புமணி குற்றச்சாட்டு

 
Anbumani Ramadoss

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

விளைநிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. என்.எல்.சி நிலக்கரி சுரங்க விவகாரம் கடலூர் மட்டுமல்ல 5 மாவட்ட மக்களின் பிரச்சனை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவில்லை. கடலூரில் நடைபெறும் அவலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. முழு அடைப்பு போராட்டத்தின் நோக்கத்தை வணிகர்கள், வியாபாரிகள் உணர்ந்துள்ளனர். 

anbumani

அடுத்த ஆண்டிற்குள் என்.எல்.சியை தனியாருக்கு விற்க போகிறோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ள என்.எல்.சிக்காக அரசு வேகவேகமாக நிலத்தை கையகப்படுத்துவது ஏன்? என்.எல்.சிக்காக நிலம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படவில்லை. மேலும் வேலை கொடுத்தாலும் உரிய ஊதியத்துடன் வேலை கொடுப்பதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் என்.எல்.சி வந்த பிறகு ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. என்.எல்.சியால் காற்று மாசடைந்து ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிப்பட்டுள்ளனர். என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் அரசு முரண்பாடான கொள்கையை கடைபிடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.