பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாமக அனுமதிக்காது - அன்புமணி பேச்சு!

 
anbumani Ramadoss
பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாமக அனுமதிக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகில் எந்த நாட்டில் மது இல்லை. உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என கூறினார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
 
இந்த நிலையில், பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாமக அனுமதிக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்திய விடுதலைக்கு காந்தி என்றால், தமிழ்நாடு சமூக விடுதலைக்கு கதாநாயகன் தந்தை பெரியார்தான். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் பெரியார்தான். தமது கொள்கையில் உறுதி கொண்டிருந்தாலும், தம்மை தேடி வந்தோர் உணர்வுகளை, மத நம்பிக்கைகளை மதித்தவர் பெரியார் என கூறினார்.