ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்? காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்துக- கே.பாலு
பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்? காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விசாரணை தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாட்டாளிகளின் குலதெய்வம் மருத்துவர் அய்யா அவர்கள் வாழும் இல்லம் கோயில் ஆகும்.
தைலாபுரம் இல்லத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் நிலவுவதை சகித்துக்கொள்ள முடியாது. அங்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அங்கு ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன? என்பதை காவல்துறை வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணையைத் தீவிரப்படுத்தி, ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


