"ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதை..."- அன்புமணி
கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும் கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டியின் ஆட்கள் கடத்திச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது. அநீதியையும், கனிமவளக் கொள்ளையையும் அம்பலப்படுத்தியதற்காக செய்தியாளர்களை திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆள்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளை நடத்துவதையே திமுகவினர் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளைக்கு திமுகவைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவர் காட்பாதராக இருப்பதைப் போல திருச்சி, கரூர் மாவட்டங்களில் கனிமக் கொள்ளைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தான் காட்பாதர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனிமக் கொள்ளையில் ஈடுபட்டதற்காக பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி உள்ளிட்ட 12 குவாரிகளுக்கு ஏற்கனவே ரூ.44.50 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதுமட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 அடி கூடுதலாக தோண்டியதற்காக எனக்கு ரூ.23 கோடி அபராதம் விதித்துள்ளனர் என்று பழனியாண்டி ஒப்புதல் வாக்குமூலம் அளித்த கொடுமையும் நடந்தது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக கனிமக் கொள்ளையின் உச்சமாக செய்தியாளர்களையே கடத்திச் சென்று தாக்கும் அளவுக்கு பழனியாண்டியின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இதற்காக அவரையும், அவரது ஆட்களையும் கைது செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


