"தவெக அரசு தவறுகளை செய்கிறது”- அன்புமணி ராமதாஸ்
கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் தவெக அரசு பேசக் கூடாது, கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/25/anbumani-ramadoss-pmk-coimbatore-press-meet-tamil-news-2025-10-25-16-03-29.jpg)
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும் வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது இருதரப்பு பிரச்சனை என்று பொருள் ஆகிவிடும். இது தமிழ்நாட்டின் உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரை வார்ப்பதற்கு சமம். ஆகவே கர்நாடகா செல்வதை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். கர்நாடக அரசுடன் எந்த வகையில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மேலும், மேலும் தவறுகளை செய்கிறது” என்றார்.

