தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தாயை சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி!
தீவிர பிரச்சாரத்திற்கு இடையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்று தனது தாய் சரசுவதி அம்மையாரை சந்தித்து ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
அப்பா ராமதாஸ்க்கும் மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில், பாட்டாளி மக்கள் கட்சியும் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது. இதனால் அன்புமணி தரப்பினரை பழிவாங்க வியூகம் அமைத்த ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார். அணைக்கட்டு, ஆற்காடு, அரக்கோணம் தொடங்கி ஈரோடு மாவட்டம், அந்தியூர் வரை 38 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறார் ராமதாஸ்.
பரப்புரைக்காக தந்தை ராமதாஸ் சேலம் சென்றுள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தனது தாய் சரசுவதி அம்மையாரை சந்தித்து ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அங்கு அன்புமணி உணவருந்திய புகைப்படமும் இணையத்தில் வைரலாகிவருகிறது.



