அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை- பாமக

 
anbumani

அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் முக்கியமல்ல.. இபிஎஸ் விளக்கம் தரணும்' - நெருக்கடி தரும்  பாமகவினர் | nakkheeran

சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலு, “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை. அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 

அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டது. அதே நிலை தான் தற்போது தொடர்கிறது. அதிமுக உள்பட எந்த கூட்டணியிலும் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி  இல்லை. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முழு  வீச்சில் தொடங்கி உள்ளோம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்த நிலைப்பாட்டை எங்களுடைய கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.