சென்னையில் பிரதமர் மோடி சந்திப்பு திடீர் ரத்து..! - கடைசி நிமிடத்தில் வந்த அதிரடி அறிவிப்பு..!
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னரே பிரதமர் மோடி மூன்று முறை தமிழ்நாட்டுக்கு வந்துசென்றுவிட்டார். ஆனால், காங்கிரஸ் முகாமில் இருந்து ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேவோ யாருமே எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏற்கெனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பல கசப்புகள் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தின் மீதான காங்கிரஸின் பாராமுகம் களத்தில் திமுக மற்றும் அதன் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு சுணக்கத்தை உருவாக்கி உள்ளன. வேட்பாளர் அறிவிப்பும் தாமதம் ஆவதால் முதல்வர் கூட வேட்பாளர் இல்லாமல், காங்கிரஸின் தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் பொறுத்தவரையில் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. வரும் 6ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவுக்கு வர உள்ளது. இப்படியான சூழலில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இது பாஜக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
இதற்கிடையே தான் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வர உள்ளார். ஏப்ரல் 3ம் தேதியான இன்று மதியம் பிரதமர் மோடி விமானத்தில் சென்னை வருகிறார். அதன்பிறகு அங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மதியம் 3 மணியளவில் அங்குள்ள அஜந்தா சிக்னல் சந்திப்பு முதல் அண்ணா சதுக்கம் வரை 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி ரோடுஷோ நடத்துகிறார். அதன்பிறகு அவர் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
பிறகு மீண்டும் சென்னை வந்து தனியார் ஹோட்டலில் இரவு நேரத்தில் ஓய்வெடுக்க உள்ளார். பிறகு ஏப்ரல் 4ம் தேதியான நாளை மதியம் பிரதமர் மோடி சென்னையில் இருந்து கேரளா செல்ல உள்ளார். இதற்கிடையே தான் சென்னையில் இருக்கும் பிரதமர் மோடி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மற்றும் ரோடுஷோ நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் பிரதமர் மோடி ரோடுஷோ, பிரசாரம் உள்ளிட்டவற்றை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
மாறாக ஏப்ரல் 4ம் தேதியான சனிக்கிழமை பிரதமர் மோடி தேர்தல் பணி தொடர்பாக மட்டும் தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தற்போதைய சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் அப்செட்டில் உள்ளார். இதனால் தேர்தல் முடிவடைந்த பிறகு தமிழக பாஜகவில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

