பாஜக நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை
![பாஜக நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/72714524e38375f87a49522ddcb8633d.png)
நாளை சென்னை வருகை தரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்க இருக்கிறார்.
சென்னையில் நாளை நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடி ஜன. 19-ல் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் மோடி அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த நாள் ஜன. 20 காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வரும் மோடி ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைகிறார். அக்னி தீர்த்த கடல் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு, இரவு 7. 15 மணி வரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெறும் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின் இரவு பிரதமர் மோடி ராமகிருஷ்ண மடத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
இதனை தொடர்ந்து மறுநாள் 21ம் தேதி காலை 8:55 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தீர்த்தம் எடுத்து வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தனுஷ்கோடியில் இருந்து வரும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோயிலுக்கு 11.05 மணி அளவில் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். இதன்பின் பிரதமர் மோடி தீர்த்தம் எடுத்துக்கொண்டு சாலை மார்க்கமாக காரில் மண்டபம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை சென்று தொடர்ந்து விமானத்தில் காசி செல்கிறார்.
இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை இரவு தங்கும் பிரதமரை, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சந்திக்கின்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோருக்கும் பிரதமர் மோடியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.