"சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்! அழுதுட்டு போகட்டும்..."- திமுகவை விமர்சித்த மோடி

கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது மத்திய அரசு, அனைத்தும் செய்தும் கூட சிலர் தமிழகத்தில் அழுது கொண்டே இருக்கிறார்கள் என திமுக அரசை பிரதமர் மோடி விமர்சித்தார்.
ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் இருந்து எனக்கு எழுதும் கடிதங்கள் ஆங்கில மொழியில் இருக்கின்றன. கையெழுத்தும் ஆங்கில மொழியில் உள்ளது. தமிழ் மொழியில் கையெழுத்திடுங்கள். எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள். தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. 21 ஆம் நூற்றாண்டில் மகத்தான பாரம்பரியத்தை எடுத்து செல்ல வேண்டும் என உறுதியாக உள்ளோம். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்டது. நூறாண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கட்டியவர் ஒரு குஜராத்தி. ராமர் வாழ்க்கை, ஆட்சியில் கிடைத்த உத்வேகம். தேசத்தை வடிவமைப்பதற்கு உதவியாக உள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயிலே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமான நிதி வழங்கியுள்ளோம். இதெல்லாம் செய்த பிறகும், நிதி தரவில்லை என்று சிலர் அழுகிறார்கள். அவர்கள் அழுதுகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும், அழுது விட்டு போகட்டும். மத்திய அரசின் நிதி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். தமிழ்நாட்டின் கட்டமைப்பே மத்திய அரசின் முதன்மை நோக்கம். ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவப் படிப்பின் பாடத்திட்டத்தைத் தமிழில் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது” என பேசினார்.