ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
![modi](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ad9e89baa4c4e3b647dca0d1aa891c6a.jpeg)
தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன் தினம் தமிழகம் வந்தார். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி மூலவரை தரிசனம் செய்தார். இதனையடுத்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். இதனையடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடினார். இதனை தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு நடைபெற்ற பஜனையிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு காரில் புறப்பட்டு சென்றார். தனுஷ்கோடி கடலில் நீராடி மண்ணால் செய்யப்பட்ட அரிச்சல் முனையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.