நெசவாளர்களுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வேண்டுகோள்!
இன்று (ஆகஸ்ட் 07) தேசிய கைத்தறி தினத்தையும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கைத்தறிப் பொருட்களை வாங்குவதன் மூலமும், சமூக ஊடகங்களில் அவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் நெசவாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கியது. இந்த இயக்கம் நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, தன்னம்பிக்கையின் சின்னமாக மாறியது.
சிறிய வீடுகளில் இருந்து பணியாற்றி, பலவகையான கைத்தறித் துணிகளை உருவாக்கும் நாட்டின் நெசவாளர்களைக் கௌரவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த நிகழ்வு. குறைந்தது ஒரு கைத்தறிப் பொருளையாவது வாங்கி, அதை விளம்பரப்படுத்தும் வீடியோ எடுத்து, மற்றவர்களையும் இத்துறைக்கு ஆதரவளிக்கத் தூண்டும் வகையில் அதை மக்கள் இணையத்தில் பகிர வேண்டும்.தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும்.
மக்களின் ஆதரவு, இந்திய நெசவாளர்களின் திறமையையும் கைவினைத்திறனையும் உலகிற்கு வெளிக்காட்ட உதவும். இந்தியாவின் கைத்தறி பொருட்களை பிரபலப்படுத்துவோம். அதை பயன்படுத்த மறக்க கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

