காதல் திருமண தகராறில் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு! 35 சவரன் நகை கருகிய சோகம்
திருமங்கலத்தில் மகளின் காதல் திருமணம் செய்ததால் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு முன் விரோதம் காரணமாக காதலன் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - சோழவந்தான் சாலையில் வசித்து வரும் செல்வம் - பத்மாவதி தம்பதியின் இளைய மகன் அஷ்வந்த் (25)இவர் திருமங்கலம் பழனியாபுரத்தைச் சேர்ந்த கவிராஜன் என்பவரது மகள் அனிதா (24) இருவரும் 4 வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அனிதா பெற்றோருடன் செல்ல விருப்பமின்றி காதலனோடு சென்று விட்டதால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி இருவீட்டாருக்கும்இடையே தகராறு நடந்து வந்துள்ளது.இது தொடர்பாக செல்வம் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் புதன்கிழமை இரவு 8 மணி அளவில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினி மாமியார் உடல்நல குறைவால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் செல்வம் அவரது மகள் - மருமகன், மகன் - மருமகள் ஆகியோர்தனித்தனி இருசக்கர வாகனங்களில் மதுரைக்கு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை பார்த்துவிட்டு மீண்டும் திருமங்கலம் வந்தனர். திருமங்கலம் நகர் காவல் நிலையம் அருகே வந்த போது அஸ்வந்த் வாகனத்தை கவிராஜன் மறித்து தகராறு செய்துள்ளார். அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து எரிந்ததில் அஷ்வந்த் தந்தை செல்வத்திற்கும் அவரது பேத்திக்கும் காயம் ஏற்பட்டது.தகராறு நடப்பதை கண்டு அவ்வழியாக வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு காயம் பட்ட செல்வம் மற்றும் அவரது பேத்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாகச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இரவு பத்து மணி அளவில் எட்டு பட்டறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அஸ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளார்.பெட்ரோல் குண்டு வீசியதால் வீட்டிலிருந்து அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீ விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்கள் பார்த்து விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால் உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் உருகியது. மேலும் ரொக்கப்பணம் 2 லட்சம் ரூபாய் தீயில் கருகி சாம்பலானது. தீ விபத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செல்வம் குடும்பத்தினர் அனைவரும் வீடு தீயில் கருகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீயில் உருகிய நகைகளை கைப்பற்றி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுவீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.இச் சம்பவம் தொடர்பாக அஸ்வந்த் சகோதரி பிரியதர்ஷினியின் கணவர் பாலமுருகன் பெட்ரோல் குண்டு வீசியது கவிராஜன் அவரது மைத்துனர் சாந்தகுமார் மற்றும் கவிராஜன் மகன் கௌசிக் உள்ளிட்டோர் தான் காரணம் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


