நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு

நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய வேண்டும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார்.
புதுடெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார், அதில் தமிழகம் ஈரோட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொதுக் கூட்டங்களில் பரப்புரையாற்றும் போது கடுமையான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற தலைவராக விளங்கும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுவது மற்றும் மதம் ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக குண்டு கையில் இருப்பதாகவும், அதை இன்னும் வீசவில்லை, என் தலைவன் கொடுத்த அந்த குண்டை வீசினால் முற்றிலுமாக பற்றி எரிந்து விடும். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது, ஒரு கோடி எரிமலையை காத்த தீ தான் எனது தலைவன், நாங்கள் கொளுத்தி போட்டுட்டு போயிடுவோம். தமிழகமே பற்றி எரியும் என ஈரோடு இடைதேர்தல் பிரச்சார மேடையில் பேசியுள்ளார். மேலும் கொலை வெறியில் உள்ளதாகவும் ஆவேசமாக மிரட்டி உள்ளார். இவரை போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முருகன் என்பவர் பிரச்சார மேடையை பயன்படுத்தி செருப்பை தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார். அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி மிரட்டி வருகிறார். இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரியதொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகும் என புரிந்து கொள்ள முடிகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆகவே சீமானின் நாம் தமிழர் கட்சியினுடைய அங்கீகாரத்தை ரத்து செய்து, அவரது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதனை விரிவாக தனது மனுவில் குறிப்பிட்ட புகழேந்தி, அவர் பேசியதை ஆதாரத்தோடு மனுவில் இணைத்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஈரோடு மாவட்ட ஆட்சியர், தலைமை தேர்தல் கண்காணிப்பாளர், தலைமை தேர்தல் கண்காணிப்பாளர், மாநில தலைமை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.