மக்கள் அதிர்ச்சி..! இனி மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது..!

 
1

சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி உக்கிரம் காட்டியதால் வெப்பத்தை தணிக்க மாலை நேரங்களில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆனால், இரவு 10 மணிக்குமேல் மெரினா கடற்கரையில் இருக்க அனுமதி கிடையாது என கூறி பொதுமக்களை போலீஸார் அப்புறப்படுத்துகின்றனர். அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் புழுங்கிக் கிடக்கும் சூழலில், 24 மணி நேரமும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில்பார்கள் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கும் தமிழக அரசு, இரவு நேரங்களில் காற்று வாங்கவும், குளிர்ச்சிக்காகவும் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்து துரத்திவிடுகிறது.

எனவே, மெரினா உள்ளிட்ட கடற்கரைகளி்ல் இரவு 10 மணிக்குமேல் நள்ளிரவு வரை பொதுமக்களை அனுமதிக்கவும், குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் வரும் பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் வாதிட்டதாவது: இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.