விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா : ப. சிதம்பரம் வரவேற்பு!

 
Q Q

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன். பட்டா கோருவது மட்டுமல்ல, பட்டா மாறுதல், பட்டாவில் பெயரைச் சேர்ப்பது நீக்குவது போன்ற விண்ணப்பங்களும் இருக்கின்றன.

 

மாவட்ட வருவாய் அதிகாரி (DRO), கோட்ட வருவாய் அதிகாரி (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) என்று அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும் போது பட்டா தொடர்பான விண்ணப்பங்களும் குறைகளும் ஏன் மலைபோல் தேங்கிக் குவிந்திருக்கின்றன என்பது புரியாத புதிர். இந்த நிலை பல ஆண்டுகளாகப் பல அரசுகளில் நிலவி வரும் அவலம்.

கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்ட பொது அறையில் மக்கள் முன்னிலையில் ஒவ்வொரு விண்ணப்பமாக எடுத்து அதிகாரிகள் முடிவெடுத்தால் இந்தப் பணியை 3-6 மாதங்களில் முடிக்க முடியும் என்று கருதுகிறேன். ஒரு விண்ணப்பதாரர் மீண்டும் மீண்டும் குறை தீர்க்கும் நாட்களில் படையெடுப்பதைப் பல அதிகாரிகளிடம் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலினின் புதிய ஆணை இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.