யாருக்கெல்லாம் பட்டா கிடைக்கும்?- தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

அமைச்சரவை முடிவின் படி ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பயன்பாட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள், கல்லாங்குத்து, புறம்போக்கு, கிராம நத்தம், அரசு நஞ்சை மற்றும் புஞ்சை மற்றும் பிற புறம்போக்கு நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்கப்படும். நீர் நிலைகள், கோவில், வழிபாட்டு தலம் மற்றும் வக்பு வாரியத்தின் பட்டா நிலங்கள், ஒன்றிய அரசு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பட்டா பெற முடியாது.
மாவட்ட தலைநகரம் மற்றும் மாநகராட்சிகளின் புற எல்லையில் இருந்து 18 கிலோ மீட்டர் சுற்றளவு மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளின் புற எல்லையில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பெல்ட் எரியாவில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மாநில அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறை செயலாளர் கொண்ட குழுவும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மின்சார கட்டண ரசீது, கேஸ் இணைப்பு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, சொத்துவரி ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
கிராம நிர்வாக அலுலவர் இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்க வேண்டும். இதன்பிறகு மாவட்ட ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டு குழு தாலுகா அளவிலான குழு நிலத்தை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் தகவலின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழுவில் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும். 3 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள் அந்த நிலத்தின் மதிப்பை செலுத்தினால் பட்டா வழங்கப்படும். தொடக்க கட்ட ஆய்வின் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 29,187 மற்றும் மாநிலத்தில் பிற பகுதிகளில் 57,084 என்று மொத்தம் 86,271 பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நில நிர்வாக ஆணையர் இந்த திட்டத்தின் செயல்பாட்டு கண்காணித்து சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறப்பு பட்டா வழங்கும் திட்டம் இந்த திட்டம் 31 டிசம்பர் 2025ம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.