இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது; 8 பேர் பலியான சோகம்..!! பிரதமர் மோடி இரங்கல்..!!
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள திஸ்ஸா-பைராகர் சாலையில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணிகள் 20 பேர் பயணித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.இந்த விபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். பஸ் டிரைவர், கண்டக்டர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து இன்று காலை 7.15 மணிக்கு நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

