“எங்க மகள் ஆசை பட்டுட்டா..”- போலி நீட் சான்று தயார் செய்து எம்பிபிஎஸ் சீட் வாங்கிய பெற்றோர்! பரபரப்பு பின்னணி

 
ச் ச்

திண்டுக்கல்லில் நீட் தேர்வில் முறைகேடு செய்து போலி சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, அவருக்கு உதவி செய்த பெற்றோர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதர் (55). திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி (47). மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி (19). பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் காருண்யா ஸ்ரீதர்ஷினி 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த காருண்யா எப்படியாவது மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் இணைய தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி நீட் தேர்வில் 456 மதிப்பெண் எடுத்து  தேர்ச்சி பெற்றதாக போலியான சான்றிதழ் தயார் செய்தார். மேலும் மருத்துவ கலந்தாய்வில்  திண்டுக்கல்  மருத்துக் கல்லுாரியில் மருத்துவ இடஒதுக்கீடு கிடைத்ததற்கான சான்றிதழையும் போலியாக தயாரித்து அட்மிசனுக்கு பெற்றோருடன் வந்தார். அங்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அட்மிசன் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள்  சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீதர்ஷினி, நீட்  தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துப்படிப்பில் சேர்ந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி முதல்வர் வீரமணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்திய போலீசார் போலியாக சான்றிதழ் தயாரித்து வழங்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாணவி காருண்யா ஸ்ரீதர்ஷினி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட  அப்பா சொக்கநாதர், அம்மா விஜய முருகேஸ்வரி 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது