கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50,000 அபராதம்

 
கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50,000 அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் தனசிங். இவருக்கு சொந்தமாக ஒரு டெம்போ வேன் உள்ளது. அந்த அந்த டெம்போ வேனை  வைத்து அவர்  சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 29-06-2021 அன்று சேலையூரில் உள்ள ஒரு வீட்டை காலி செய்து அதில் உள்ள பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்க சவாரி வந்துள்ளது. அதன்படி தனசிங் அன்றைய தினமே தனியார் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்துள்ளார்.

பின்னர் சேலையூரிலிருந்து செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி வழியாக கடந்து மண்டபம் சென்று அங்குள்ள வீட்டில் சாமான்களை இறக்கி விட்டு மீண்டும் அவர் வந்த வழியே வீடு நோக்கி வந்துள்ளார். அப்போது பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் வேலை செய்யவில்லை என கூறி இருமடங்கு தொகையை வசூலித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனசிங் சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது பாஸ்டேக் நன்றாகவே உள்ளது. இதில் எந்த கோளாறும் இல்லை என விளக்கம் அனுப்பி உள்ளனர். 

இதனையடுத்து மன உலைச்சல் அடைந்த தனசிங் பரனூர் சுங்கச்சாவடி மீது செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோட்டில் கடந்த 06-09-2022 அன்று வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர்கள் ஜவகர், விமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் பாஸ்டேகில் போதிய பணம் இருந்தும் கூடுதல் கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக பரனுர் சுங்கச்சாவடிக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும்,  வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.