பரந்துார் புது விமான நிலைய பணிகள் நிறுத்தம்- 'சிட்காட்' தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டம்

 
parandur

பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட, 1,700 ஏக்கரில், 'சிட்காட்' தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Image

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் 5,600 ஏக்கர் பரப்பரளவில் அமைக்க, தி.மு.க., தலைமையிலான கடந்த அரசு முடிவு செய்தது. திட்டத்திற்கான நிர்வாக அனுமதி, 2023 அக்டோபர் மாதம் தமிழக அரசு வழங்கியது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களில், 3,700 ஏக்கர் அங்குள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது. பரந்துார் சுற்றுப்புற பகுதிகளில், 20 கிராமங்களை ஒருங்கிணைத்து விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும், அணுகு சாலைகள் அமைக்கவும் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், கிராம மக்களை காலி செய்து, அவர்களுக்கு வேறு இடம் வழங்கி, வீடு கட்டி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்தன.

இரு ஆண்டுகளாக நில எடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 20 யூனிட்டுகளின் கீழ், தாசில்தார்கள், சர்வேயர் என, வருவாய் துறையினர், 300 பேர் நில எடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, 1,700 ஏக்கருக்கு மேலாக, நில எடுப்பு பணிகளை முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, கடந்தாண்டு த.வெ.க., தலைவர் விஜய் ஏகனாபுரத்தில் பேசியிருந்தார். ஆட்சி மாற்றம் வந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில், பரந்துார் விமான நிலையம் தொடர்பான ஆலோசனை ,கூட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதைத்தொடர்ந்து, நில எடுப்பு உள்ளிட்ட விமான நிலைய பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது.

நிலம் கையகப்படுத்தப்பட்ட, 1,700 ஏக்கரில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க ஆலோசனை நடத்தி வருகிறது.மொத்த நிலத்தில், 30 சதவீதம் தான் தற்போது வரை எடுக்கப்பட்டுள்ளது.  இவை, நில எடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படாமல், நில உரிமையாளர்கள் நேரடியாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளனர்.அரசின் கொள்கை முடிவு காரணமாக, விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால், கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலங்களை, நில உரிமையாளர்களுக்கு திரும்ப தர வாய்ப்பில்லை. அப்படி உரிமையாளர்களுக்கு கொடுக்கும் முடிவை எடுத்தாலும் அதற்காக அவர்கள் பெற்ற இழப்பீட்டுத் தொகையை உரிமையாளர்களால் திருப்பி அளிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க வாய்ப்பு இருக்குமா என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி முதல் கட்டமாக உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த தொழில் பூங்கா அமைக்கலாமா என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.