பல்லடம் படுகொலை - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்

பல்லடம் படுகொலைக்கு முன் விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் முன்பு மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் மது அருந்தியுள்ளனர். இதனை செந்தில் ராஜ் தட்டிக்கேட்ட நிலையில், அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முற்பட்ட போது செந்தில் ராஜின் தம்பி மோகன்ராஜ், அவரது தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது. வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலைக்கு முன்விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார். உணவகம் எதிரே இந்த வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்திருக்கிறார். உணவகத்தில் இருந்து சிலிண்டர், கோழிக் கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம் ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் செந்தில்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முதலில் உடல்களை பெற ஒப்புதல் தெரிவித்த உறவினர்கள், தற்போது மறுப்பு தெரிவித்துள்ளனர். உடல்களை வாங்க வேண்டாம் என உறவினர்களிடம் பாஜகவினர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பாஜகவினர் மறியல் காரணமாக வளாகத்தின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.