போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்? ஏவுகணை சோதனை நடத்த உத்தரவு!
கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதேபோல் இந்தியா தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


