மழையால் 33% நெற்பயிர்கள் சேதம்- ஒரு வாரத்தில் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்
மழை காரணமாக 33 சதவீதத்திற்கு மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பயிர் காப்பீடு திட்டம் மற்றும் சேதம் அடைந்த பயிர்களை கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த பயிர் சேதங்களை கண்காணிக்க, மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய பயிர்களில், 33 சதவீதத்திற்கு மேல் சேதம் அடைந்தால், பயிர் இழப்பீடு வழங்கப்படும்.
வேளாண்மை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து, பயிர் சேத பாதிப்பை கூட்டு கணக்கெடுப்பு செய்து, கலெக்டர்கள் வாயிலாக, அரசுக்கு அறிக்கை அனுப்ப உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, இது தொடர்பாக கணக்கெடுப்பு ஒரு வாரத்தில் நிறைவடையும் என்றும், இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதல்வர் அறிவிப்பார் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


