கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : மேலும் ஓரு பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது..
திருநின்றவூரில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் குமார் தற்கொலை செய்த வழக்கில், மேலும் ஒரு பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருநின்றவூரில் கடந்த 29 ஆம் தேதி மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த குமார் என்ற மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் குமாரை, இழுத்துச் சென்று மண்டியிட வைத்து ராகிங் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்த 31 ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர் மனோஜை முதலாவதாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள 6 மாணவர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்படுள்ள ஹாரிஸ் என்ற மாணவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.