தலையில் முடி வளர்க்க, வகுப்பறையை விட்டு வெளியில் செல்ல கட்டுப்பாடு- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் துரைக்கண்ணுவை பதவி நீக்கம் செய்து , கல்லூரி நிர்வாகத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி வாயில் முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பார்த்திபன் ,அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் பதவிக் காலம் முடிந்த பின்னும் கல்லூரி நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதாகவும் , பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயர்க் கல்வி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி மாணவர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தலையிட்டு பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் 6 கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலால் காவல் உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கல்லூரி முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கல்லூரி வாயில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாயில் முன்பாக கூடி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு எதிராகவும், கல்லூரி முதல்வருக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் , கல்லூரி முதல்வரின் தூண்டுதலால் கேள்வி கேட்கும் மாணவர்கள் கைகள் உடைக்கப்படுவதாக குறிப்பிட்டு கை உடைந்து கட்டுப்போட்ட நிலையில் இருந்த மாணவர் ஒருவரின் புகைப்படத்தை செய்தியாளர் சந்திப்பின்போது காட்டினர். மேலும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்ட வடிவம் மாறும் என்று எச்சரித்த அவர்கள் காவல்துறையினரை குவித்து தங்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகவும் கூறினர். கேண்டினை பயன்படுத்த மாணவர்களை அனுமதிப்பதில்லை எனவும் கல்லூரி மைதானத்தை நிர்வாகத்தினர் வெளி ஆட்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். முடி வளர்ப்பதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கூறினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்