காவிரியில் விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு

காவிரியில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல எனவும், தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் தலைமையிலான 12 எம்பிக்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. இதனை ஏற்று தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 103.5 டிஎம்சி காவிரிநீரில் 38.4 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.